பால் கொழுக்கட்டை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதன் சுவை பலரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். இதில் வெல்லத்தையும் பயன்படுத்துவதால், அதில் உள்ள இரும்புச்சத்து நமக்கு கிடைக்கிறது. மேலும், “தொண்டை மற்றும் நுரையீரல்” தொடர்பான நோய்களை வெல்லம் குணப்படுத்தும். பால் கொழுக்கட்டை செய்வது எப்படி? தொடர்ந்து படியுங்கள்…
பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
- சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- காய்ச்சிய பால் – 1 கப்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பால் கொழுக்கட்டை செய்முறை:
STEP 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஓரளவு கெட்டியான பிறகு, ஏலக்காய் பொடி தூவி, இறக்கி ஆற வைத்து வடிகட்டி கொள்ளவும். இப்போது பாகு ரெடி.
STEP 2
மூன்று மணி நேரம் இட்லி அரிசியை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை 2 முதல் 3 முறை கழுவி, அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். இட்லிக்கு அரைக்கும் மாவு போல இல்லாமல் சற்று கெட்டியாக கொழுக்கட்டைக்கு ஏற்றவாறு அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
STEP 3
அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து, எண்ணெய் அந்த மாவில் நன்கு கலக்கும்படி, ஓரிரு நிமிடங்கள் கிளறி விடவும். பிறகு வதக்கிய மாவை இறக்கி, நன்கு ஆற விட்டு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
STEP 4
ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், மிதமான தீயில் வைத்து ஏலக்காய், சுக்கு பொடியை சேர்த்து உருட்டி வைத்த மாவை ஒவ்வொன்றாக சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து, பிறகு காய்ச்சிய பாலை சேர்த்து கிளறி விட வேண்டும். அதனுடன், வெல்லப்பாகு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
STEP 5
பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசி மாவுடன், தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கும் படி செய்து, அடுப்பில் உள்ள பாலில் ஊற்றி ஒரு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது பால் சற்று சுண்டுவதற்கும், அதன் சுவையை கூட்டுவதற்கும் உதவுகிறது. இறுதியாக இறக்கும் முன்பு, சிறிது தேங்காய் துருவலை பால் கொழுக்கட்டையின் மேல் தூவி இறக்கினால், அருமையான பால் கொழுக்கட்டை தயார்!