ஒரு சுவாரசியமான கதைதான் இது. ஜெகன் சித்ராவின் திருமணம். டாக்டர் கனவுடன் இருந்த ஜெகனுக்கு சீட்டு கிடைக்காததால், பிவிஎஸ்சி(BVSc – Bachelor of Veterinary Science) படித்து முடித்து, கால்நடை மருத்துவராக திருவாரூரில் வேலை கிடைத்ததால், அங்கு சென்றிருந்தான். ஜெகனின் சொந்த ஊர் தஞ்சை என்றாலும், திருவாரூரில்தான் வேலை.
கால்நடை ஆஸ்பத்திரியில் மாட்டை கிடையில் விட்டுதான், சினை ஆகாத மாடுகளுக்கு சினை ஊசி போடுவார்கள்.
அப்படி ஒரு நாள் தங்களது மாட்டுக்கு சினை ஊசி போட சிவானந்தமும், அவரது மகள் சித்ராவும் அங்கு வந்திருந்தனர். அவர்களின் மாடு புதிய கால்நடை மருத்துவராக வந்திருந்த ஜெகனை ஊசி போட விடாமல், முரண்டு பிடித்து காளையை போல முரட்டுத்தனமாக வெளியே பாய்ந்தது. அங்குள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள், அந்த மாட்டை பிடிக்கவே அஞ்சினர்.
புதிதாக வந்த டாக்டர் என்பதால் ஜெகனும் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக்கொண்டிருந்தான்… இதனையெல்லாம் சித்ராவும் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்த ஒரு அதிசயம், அப்போதுதான் நடந்தது.
தங்களது மாட்டின் முன்னே வந்து நின்ற, சித்ரா “ஏய் செல்லம்மா, பெரியவங்க சொன்னா கேட்க மாட்டியா நீ! இங்கே வா” என்றதும், மாடு அவள் சொன்ன இடத்தில் வந்து நின்றது.
சித்ரா மாட்டிடம், “இந்தப் பக்கம் திரும்பு” என்று சொன்னதுமே, மாடும் திரும்பியது.
“இப்ப போடுங்க ஊசிய” என்றாள் அவள். இரண்டே நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது.
ஜெகன் திகைத்து போய், ஆச்சரியத்துடன் சித்ராவையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஜெகனுக்கு இனம்புரியாத ஈர்ப்பு சித்ரா மீது ஏற்பட்டது. அவளின் அழகான முகம், அந்த ஆளுமையான பேச்சு அவனை என்னவோ செய்துவிட்டது.
ஜெகனுக்கு சித்ராவை பற்றி விசாரித்த போதுதான் தெரிந்தது, அவனின் தூரத்து சொந்தம்தான் சித்ரா என்று… இதனால், ஜெகனோ தன் அம்மா பார்வதியிடம் சொல்லி, உடனே சித்ராவை பெண் கேட்குமாறு சொன்னான்.
பார்வதி ஏற்கனவே, தன் தம்பி பொண்ணை ஜெகனுக்கு முடிக்கலாம் என்று முடிவு செய்து இருந்தாள். ஆனால், ஜெகன் பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றதால், சித்ராவின் வீட்டிற்கு சென்ற பார்வதி, வேறு வழியில்லாமல் சித்ராவை பெண் கேட்டாள்.
ஐந்தறிவுடைய வாயில்லா ஜீவனுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் என்பதாலேயே, சிவானந்தமுக்கு ஜெகனை பிடித்துவிட்டது. எனவே, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை பேசி முடித்தனர். அதன் பிறகும் கூட,
பார்வதி “இந்த பொண்ணு நமக்கு வேண்டா டா” என்று எவ்வளவோ ஜெகனிடம் சொல்லிப் பார்த்தாள்.
ஜெகனோ, கேட்கவே இல்லை. வேறு வழி இல்லாமல் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள் பார்வதி. மகனின் விருப்பத்தை மீறி பார்வதியால் எதுவும் செய்ய முடியவில்லை.
கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த போதே, “இருபது பவுன் வரைக்கும் போடனும்” என்று சித்ராவின் வீட்டில் மிகவும் தெளிவாக சொல்லி வைத்திருந்தாள் பார்வதி.
பத்து பவுனுக்கு மேலே முடியாது என்றார், சித்ராவின் அப்பா. பார்வதியோ, பிடிவாதமாக சொல்லிவிட்டாள். இதனால், மகளுக்கு வந்த சம்மந்தம் கைவிட்டு போய்விடுமோ என்கிற சூழ்நிலையில் சிவானந்தம், மேலும் இரண்டு பவுனுக்கு ஒப்புக்கொண்டு, அதை ஒரு வருடத்துக்குள் போட்டு விடுவதாக கூறினார். இதனால், திருமணமும் நடந்தது…
சித்ராவின் தலைப்பிரசவத்துக்கு வரும் முப்பதாம் தேதியை சொல்லியிருக்கிறார், பிரபல மகப்பேறு மருத்துவரான ரேணுகா தேவி. இவருடைய நர்சிங் ஹோமில் பிரசவத்திற்கு கட்டணம் அதிகம் என்றாலும், தாய்க்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் உயிருக்கு உத்தரவாதம் உள்ளது. இதுவரை இங்கு பிரசவத்துக்கு வந்தவர்களில் ஒரு உயிர் கூட போனதில்லை என்பதாலேயே, இவருடைய கட்டணமும்(fees) ஏறிக்கொண்டே செல்கிறது.
சித்ராவின் நாத்தனாருக்கு இங்குதான் குழந்தை பிறந்தது. அப்போதே ரேணுகா தேவியின், நர்சிங் ஹோமில் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆனது.
இன்னுமொரு பத்து நாட்களில் குழந்தையை பெற்று எடுக்கும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சித்ராவுக்கு, நிம்மதி இல்லாமல் போனது.
இதற்கு காரணம் ‘பிரசவ செலவை யார் செய்வது?’ என்பதில் மாமியார் உருவாக்கியுள்ள ஒரு புதிய பிரச்சனைதான்.
தலைப்பிரசவம் என்றாலே, பெண் வீட்டு செலவு தான் என்பது சித்ராவுக்கு நன்றாக தெரியும். ஆனால் அப்பாவால் இவர்கள் சொல்லும் ஒரு லட்ச ரூபாய் செலவை, இப்போது செய்ய முடியாது. அப்பா எப்படி சமாளிக்க போகிறார் என்றெல்லாம் யோசித்து, கண்கலங்கி நின்று கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது அவளின் மாமியார்,
“ஏய் சித்ரா! உங்க அப்பாகிட்ட போன்ல பேசினியா? அவர் கிட்ட சொல்லீட்டியா? பிரசவத்துக்கு ஒரு லட்ச ரூபாயாவது தேவைப்படும்னு!” என்றாள்.
“அத்தே, நேத்தே போன்ல சொல்லீட்ட; இன்னைக்கு நேர்ல வந்து பாக்குறனு சொன்னாங்க” என்றாள் சித்ரா.
இதனை கேட்ட பார்வதி, சித்ராவிடம் “அந்த இரண்டு பவுன் மாதிரி ஏமாத்திடப் போறாரு” என்று கூறினாள்.
“இரண்டு பவுன யாரும் ஏமாத்தல, அத்தே! நெலம சரியாயில்ல; அதனால தா இன்னும் போட முடியல அவரால. யாரையும் எங்க அப்பா ஏமாத்த மாட்டாரு” என்று தனது அப்பாவின் நிலையை எடுத்து கூறினாள், சித்ரா.
“என் தம்பி பொண்ண கட்டி இருந்தா, இருபது பவுன் கிடச்சிருக்கும் எம்புள்ளக்கு. நீ எடையில வந்து அவன மயக்கிட்ட. பண்ணெண்டு பவுன் போடுரனு பேசுன உன்னோட அப்பன், அந்த இரண்டு பவுன இன்னும் போடுறாரு. குழந்தையே பொறக்க போகுது! குழந்தைக்கு பேர் வைக்கும் போது, எதும் செய்யாம வெறும் கையில தான் நிக்கப் போறாரு. என் தலையெழுத்து! உன்னை சொல்லிக் குத்தமில்ல. என்னோட புள்ளைய தா சொல்லனும். அவனுக்கு போச்சு பாரு புத்தி உன்மேல! அத சொல்லனும்” எனக்கூறி தலையில் அடித்துக் கொண்டாள், பார்வதி.
வயிற்றில் குழந்தையை சுமப்பதோடு மட்டுமல்லாமல் மாமியாரின் இழிவான பேச்சையும் கேட்டுக் கொண்டு, கைகளால் வாயை பொத்தி ஊமையாய் அழுதாள் சித்ரா. அன்று மாலையே சிவானந்தம் தனது மகளை பார்க்க பூ, பழமெல்லாம் வாங்கி வந்திருந்தார். சித்ரா அன்புடன் தந்தையை வரவேற்றாள். பிறகு, சிவானந்தம் பார்வதியிடம்,
“வணக்கம் சம்பந்தியம்மா, என் மேல நீங்க கொஞ்சம் கோவமாக இருப்பீங்கன்னு தெரியும். இந்த தடவ குறுவ சரியில்ல, சம்பாவுல கொஞ்சம் இலாபம் கெடச்சாலும் முந்துன கடன அடைக்கவே சரியா போச்சு. பருத்தி கை கொடுக்கும்னு பார்த்தா, காய் வெடிச்சு வர்ற நேரத்துல மழை பேஞ்சு அதையும் கெடுத்துடுச்சு. இப்போதைக்கு எப்படியோ தோது செஞ்சு நாற்பதாயிர ரூபா கொண்டு வந்திருக்கேன். இத வாங்கிகிட்டு நல்லபடியா முடிச்சிட்டு வாங்க” என்று மிகவும் தயவாக பேசினார்.
கிராமத்தில் அந்த அளவிற்கு அதிகாரம் செலுத்தி பேசும் அப்பா, தனக்காக இப்படி பணிந்து பேசுவதை பார்த்து கண்கலங்கினாள் போனாள், சித்ரா.
“நாற்பது ஆயிரத்தை மட்டும் வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போய் வேடிக்க பாக்க சொல்றீங்களா” என்று வார்த்தைகளை பேசிக் கொண்டே போனாள், பார்வதி.
“நான் வளகாப்பு பண்ணின உடனே பொண்ண அழைச்சிட்டு போறேன், பிரசவத்துக்கு பின்னாடி நல்லபடியா கொண்டு வந்து நானே விட்டுறன்னு சொன்ன. ஆனா நீங்க தா வீட்டு வேலைய யார் செய்வான்னு அனுப்பல. பெரிய பெரிய ஆஸ்பத்திரிலா எங்க ஊர்லயும் இருக்கு. அங்க இருக்க கிங் ஆஸ்பிடல் மேனேஜர் என்னோட கூட படிச்சவன்தான். நா அங்கேயே வச்சு பாத்திருன்தனா, முன்ன பின்ன பணம் கொடுத்துக்குவேன். ஆனா இந்த ஊர்ல நான் என்ன பண்ணுவ? முதலையாவே இருந்தாலும் தண்ணீல தானம்மா பலம்?” என்றார், சிவானந்தம்.
ஆனால் பார்வதியோ கொஞ்சம் கூட மனம் இறங்காமல், “இதுக்கு மேல உங்க கிட்ட பேச ஒண்ணுமில்ல. நாலு நாள் உங்களுக்கு டைம் தரேன். மிச்சக் காச கொண்டு வந்து கொடுத்துட்டு போங்க. இல்லன்னா உங்க பொண்ண உங்க வீட்டிலேயே வச்சுக்குங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள், பார்வதி.
“கவலைபடாதேம்மா.. அப்பா எப்படியும் வந்துடுவேன்” என்று சித்ராவின் தலையை தடவிக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார் சிவானந்தம்.
மாமியார்தான் கொடுமைக்காரி. ஆனால், சித்ராவின் கணவனோ பார்வதி போன்றெல்லாம் கிடையாது. ஜெகன் சித்ராவின் மீது மிகுந்த அன்புடையவன். வேலை முடிந்து மாலை தான் வீட்டுக்கு வருவான்.
இரவு ஜெகன் அறைக்குள் செல்லும் போது, அங்கு தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள், சித்ரா. என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. நாள் முழுவதும் நடந்ததை சித்ராவிடம், கேட்டு தெரிந்துக் கொண்டான் ஜெகன். பிறகு அவன் சித்ராவிடம்,
“எவ்வளவு காலத்துக்கு அம்மா இருக்கப் போறாங்க? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் வேணும்னா அம்மாவுக்கு தெரியாம ஐம்பதாயிர ரூபா தரேன். அதை உன் அப்பாகிட்ட கொடுத்து, அம்மா கேட்டபடி கொடுக்கச் சொல்லிடு” என்றான்.
கணவனின் யோசனையை ஏற்க சித்ராவுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கணவனின் ஆதரவான, ஆறுதலான பேச்சால் நிம்மதி அடைந்த சித்ரா, அவனை இறுக அணைத்தவாறு படுத்து உறங்கினாள்.
தனது பிரசவத்திற்கான பணத்தை ஏற்பாடு செய்ய, “யார் யார் காலில் விழுகிறாரோ? அப்பா” என்று தன் தந்தையை பற்றிய சிந்தனையில் மூழ்கினாள், சித்ரா.
அவளுக்கு நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது. தனக்கு மனசு சரியில்லாத போதெல்லாம் தனது ஊரில் உள்ள தோழியான ரேவதியிடம், மனம்விட்டு பேசுவாள் சித்ரா. நர்ஸாக ரேவதி தஞ்சையில்தான் இருக்கிறாள். அன்றும் அவளிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த சித்ரா, தனது கஷ்டமான சூழ்நிலையை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தாள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை. பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகளில் சித்ரா கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். எனவே மறுநாள் மாலை தன் மாமியாரிடம்,
“அத்தே குழந்தை நல்லபடியா பொறக்கனும்னு பக்கத்துல இருக்க மகமாயி கோவில் வரைக்கும் போயி வேண்டிட்டு வந்திடுற” என்று கூறினாள், சித்ரா.
ஆனால் பார்வதியோ சித்ராவை அதற்கு போ என்றும் சொல்லவில்லை. போக வேண்டாம் என்றும் சொல்லவில்லை. மாமியாரின் மெளனம் சித்ராவை சற்று கண்கலங்க வைத்தது என்றாலும், அவள் கோயிலுக்கு புறப்பட்டாள்.
கோவிலுக்கு போன சித்ரா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால், பார்வதிக்கு பகீர் என்றாகியது. பக்கத்து வீட்டு பையனை கோவிலுக்கு அனுப்பி பார்த்து வர சொன்னாள். ஆனால், கோவிலில் சித்ரா இல்லை.
இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்த பார்வதி, ஜெகனுக்கு போன் செய்யலாம் என்று செல்லை எடுத்தவுடனே போன் ரிங் ஆகியது.
“ஹலோ! இது டாக்டர் ஜெகன் வீடா?” என்றது, ஒரு குரல்.
“ஆமாம்” என்றாள், பதட்டத்துடன் பார்வதி.
“ஒன்னுமில்லம்மா, உங்க மருமகள் பிரசவ வலி வந்து கோவில் வாசலிலேயே துடிச்சுகிட்டு இருந்தாங்களாம். யாரோ அவங்கள காருல கூட்டிட்டு வந்து, எங்க இராஜா மிராசுதார் கவர்மென்ட ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. உடனே சுகப் பிரசவம் ஆயிருச்சி. ஆண் குழந்தை பிறந்திருக்கு. தாயும் குழந்தையும் நல்லாபடியா இருக்காங்க. டாக்டர் ஜெகன் மனைவின்னு கேள்விபட்டதால தனி ரூம் கொடுத்திருக்கோம். ரூம் நெம்பர் 106. உடனே புறப்பட்டு வாங்க” என்ற செய்தியை கேட்டதும் பார்வதி அதிர்ச்சி அடைந்தாள்.
“அம்மனை கும்பிட்ட ஒரு மணி நேரத்துலயே சுகப்பிரசவமா? அப்டினா, இந்த சித்ரா அம்மன் அருள் பெற்றவளா? இது தெரியாம அவளை எவ்வளவோ தூற்றி பேசிட்டனே. நா இவ்ளோ பண்ணியும், அவள் என்னைய ஒரு வார்த்தை கூட இழிவா சொன்னதே இல்லையே! நா எவ்வளவு பெரிய பாவம் செஞ்சிட்ட” என புலம்பியவாறு அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்றாள் பார்வதி.
தனது மகளின் பிரசவத்துக்காக பணத்துக்கு அலைந்து கொண்டிருந்த சிவானந்தத்திற்கு, ரேவதி போன் செய்து நல்லபடியாக குழந்தை பிறந்த செய்தியை தெரிவித்தாள். ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனார், சித்ராவின் அப்பா. உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு புறப்பட்டார்.
ஆஸ்பத்திரிக்கு வந்த பார்வதியோ, தனது பேரனை தூக்கி கொஞ்சினாள். ஜெகன் சித்ரா அருகிலேயே உட்கார்ந்து கிடந்தான். எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி.
பார்வதியை பார்த்ததும் சிவானந்தம், “சம்மந்தி அந்த இரண்டு பவுனை…” என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டு பேச தொடங்கினாள் பார்வதி.
அவள் சிவானந்தத்திடம், “உங்க பொண்ணுக்கு நீங்க போடப்போறீங்க! எப்போ முடியுமோ அப்ப போடுங்க, நா எதும் சொல்ல மாட்ட” என்றாள்.
பார்வதியின் இந்த மனமாற்றத்தையும், அவள் சொன்ன வார்த்தைகளையும் கண்டு ஆச்சரியத்தில் மகிழ்ந்து போனார், சிவானந்தம்.
இரண்டு நாள் கழித்து சித்ராவின் தோழியான நர்ஸ் ரேவதி, சித்ரா இருக்கும் அறைக்குள் வந்தாள். அவளை பார்த்ததுமே, சித்ரா கட்டிலிருந்து எழுந்து அவள் கைகளில் முத்தமிட்டாள்.
“நல்ல நேரத்துல, என்ன கோயிலுக்கு வரும்படி ஒரு யோசனையைய சொன்ன. கார் வச்சு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்து, உனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சொல்லி எனக்கு பிரசவ வலி உண்டாக்குற ஊசிய போட்டு, நல்லபடியாக குழந்தை பிறக்க உதவின. உன்ன நா என்னோட வாழ்நாள் முழுக்க மறக்க மாட்ட. இந்த இரண்டு மணி நேரத்துல என்னோட எல்லா குடும்ப பிரச்சனையையுமே நீ சரிபண்ணிட்ட. பெண்பிள்ளை மட்டும் பிறந்து இருந்துச்சின்னா உன்னோட பெயரை தான் வச்சிருப்ப” என்றாள் சித்ரா.
ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு மருமகளையும் பேரனையும் டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச்செல்ல, வாசலில் காருடன் வந்து நின்றாள் பார்வதி.